Wednesday 3 April 2013

சென்னையில் ஒரு நாள்

இந்த வாரம் வெளியான முக்கிய படங்கள் இரண்டு அதில் என்ன படம் முதலில் பார்க்கலாம் என்று குழப்பத்தில் இருந்தேன்.  பின்பு நம்ம பதிவர்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் பாராட்டை பெற்ற படம் என்ற காரணத்தால் முதலில் சென்னையில் ஒரு நாள் பார்க்கலாம் என்று முடிவு செய்து டிக்கெட் எடுத்து அமர்தேன்

ஆட்சி மாற்றம் எந்த அளவு இவர்களை மாற செய்து இருக்கிறது.  முன்பு இவர்கள் படம் ரீலிஸ் என்றால் எந்த அளவு ஆர்ப்பாட்டத்துடன் சன் பிக்சர்ஸ் என்று பெரிய எப்பெக்ட் லாம் குடுத்து கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் அப்டின்னு ஓவர் பில்டப்பா பெயர் போடுவங்கே. இப்ப சன் பிக்சர்ஸ் நல்லாசியுடன் அப்டின்னு முடிசிகிட்டாங்க. பார்க்க நல்ல தான் இருந்துச்சு.


சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் எனும் இளைஞனின் இதயத்தை சிறுமி அபிராமிக்கு பொருத்தி அச்சிறு‌மியை உயிர் பிழைக்க செய்த நிஜமான சாதனை கதை தான் "சென்னையில் ஒரு நாள்".
ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதிகளின் ஒரே மகன் விபத்தில் சிக்குகிறான். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.

அதே நேரத்தில், பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் ஒரே மகள் இதய நோய் காரணமாக ஆபத்தான நிலையில் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

யாராவது இதய தானம் செய்தால், அவர் பிழைத்துக் கொள்வார் என்கிற நிலையில் ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா தம்பதிகள் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கள் மகனின் இதயத்தை தானம் செய்ய முன் வருகிறார்கள்.

தானமாக பெற்ற இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்கு கார் மூலம், ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு போனால்தான் அந்த பெண் பிழைப்பார்.

இத்தனை குறுகிய காலத்தில், வேலூருக்கு போகமுடியாது என்று மற்ற பொலிசார் அனைவரும் பின்வாங்கும்பொழுது, சேரன் மட்டும் துணிச்சலாக முன்வருகிறார்.

அவர் சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் காரில் வேலூர் போக முடிந்ததா? தானமாக பெற்ற இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டதா? அவர் உயிர் பிழைத்தாரா? என்பது, இருக்கை 
நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’

பொலிஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமார், கம்பீரம் காட்டுகிறார். சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் வயர்லஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கார் காணாமல் போனதும் அவரும் பதறி படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கிறார்.

தானம் பெற்ற இதயத்தை வேலூருக்கு மின்னல் வேகத்தில் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு மிகுந்த பொலிஸ் கார் டிரைவராக சேரன்.

பொலிசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதையே நினைத்து வருந்தும்போது அவர் முகத்தில் காட்டிய உணர்ச்சிகளை, பயங்கர வேகத்தில் காரை ஓட்டிச் செல்லும்போதும் காட்டியிருக்கலாம்.

செல்வாக்கு மிகுந்த நட்சத்திர நடிகராக பிரகாஷ்ராஜ், கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவருடைய மனைவியாக ராதிகா. பெரிய நட்சத்திர நடிகராக இருந்தாலும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜுக்கு பொறுப்பை உணர்த்துகிற காட்சியில், ராதிகா ராதிகாதான்.
மகனின் உயிர் இயற்கையாக பிரிவதற்கு முன்பே அவருடைய இதயத்தை தானம் கொடுக்கிற அனுதாபத்துக்குரிய தந்தை–தாயாக ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா.

மகனின் இதயத்தை சுமந்து கொண்டு கார் போகிற காட்சியை பார்த்து, இருவரும் வாய்விட்டு கதறுகிற இடத்தில் படம் பார்ப்பவர்களின் கண்களும் குளமாகி விடுகின்றன.

விபத்துக்குள்ளாகும் இளைஞராக சச்சின், அவருடைய காதலியாக பார்வதி, டொக்டராக பிரசன்னா ஆகிய மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களாக கண்ணுக்குள் நிற்கிறார்கள்.

கதையை அதன் போக்கில் நகர்த்தி செல்லும் அம்சங்களாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் அமைந்துள்ளன. வித்தியாசமான ஒரு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் ஷஹித் காதர்.

பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் மகள் இதய நோயாளி என்பதை ஆரம்ப காட்சிகளில் காட்டியிருக்கலாம் அல்லது உணர்த்தியிருக்கலாம்.

அதேபோல் பொலிஸ் கமிஷனர் அலுவலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை, இன்னும் சிரத்தை எடுத்து படமாக்கியிருக்கலாம்.

மருத்துவமனையில் சச்சின் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், காதலி பார்வதி கலங்கிய கண்களுடன் அங்கு வருவதும், அவரை ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா பார்ப்பதும், சச்சின் இறந்தபின் பார்வதியிடம், ‘‘அப்பாவும், அம்மாவும் வீட்டில் இருக்கிறோம். நீ கொஞ்சம் வர முடியுமாம்மா?’’ என்று ஜெயப்பிரகாஷ் போனில் கேட்பதும், சோகமும் சுகமும் கலந்த கவிதை.

படம் கும்பகோணம் விஜயலட்சுமி தியேட்டர்ரில் பார்த்தேன் 100 ரூபாய் கட்டணமாக இருந்தாலும் மனதுக்கு நிறைவான படமாக இருந்தது. மொக்கை படமான அலெக்ஸ் பாண்டியனுக்கு 150ரூபாய் தண்ட செலவு பண்ணியது போல் இல்லை.ஆனா என்ன படம் பார்க்கும் பொழுது கடுப்பு என்றால் நான் அமர்ந்து இருக்கும் சீட்டின் பின் பக்கம் ஒரு பெண்மணி கை குழந்தையுடன் வந்து இருந்தார். படம் சீரியசான கட்டத்தில் எல்லாம் அந்த குழந்தை அழுது கொண்டே இருந்தது. படம் பார்க்க எரிச்சலை கிளப்பியது.இது மாதிரி கை குழந்தியுடன் வருபவர்கள் குலைந்தி அழும் பொழுது வெளியில் சென்று விடலாம்.இல்லை படத்திற்கு வராமல் இருந்து விடலாம். மற்றவர்களுக்கு சிரமம் தராமல். 

மொத்தத்தில் "சென்னையில் ஒரு நாள்", "சிறப்பான ஒரு நாள்"

நன்றி;சினிஉலகம் 



No comments: